கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு: அருண் ஜெட்லி
புதுடில்லி: தன் மீதும், குடும்பத்தினர் மீதும் பொய் மற்றும் அவதூறு கருத்துக்களை தெரிவித்த டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சி.பி.ஐ., வலையில் சிக்குகிறார். அவரின் முதன்மை செயலர் ராஜேந்திர குமாரின் அலுவலகம், வீடு உட்பட 14 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது. வீட்டில் இருந்து 2.50 லட்சம் ரொக்கம், மூன்று அசையா சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.அத்துடன், 'இன்டலிஜன்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம் இந்தியா' என்ற நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர்கள் ஏ.கே.துகால், ஜி.கே.நந்தா மற்றும் 'என்டவர் சிஸ்டம்ஸ்' நிறுவன இயக்குனர்கள் சந்தீப்குமார், தினேஷ் குப்தா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது. நந்தா வீட்டில் இருந்து 9.50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. அனைவர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த டில்லி முதல்வர் கெஜ்ரிவால்,என் அலுவலகத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனையிட்டனர். அரசியலில் என்னை வீழ்த்த முடியாத மோடி, பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளார்; அவர் ஒரு கோழை, மனநோயாளி.டில்லி கிரிக்கெட் சங்க தலைவராக அருண் ஜெட்லி பல ஆண்டுகள் இருந்தார். அப்போது நடைபெற்ற ஊழல்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைத்தேன். அதன் பரிந்துரைப்படி அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, ஜெட்லி மீதான ஊழல் குறித்த ஆவணங்களை வழங்கியுள்ளது. அந்த ஆவணங்களைக் கைப்பற்றவே என் அலுவலகத்தில் சி.பி.ஐ., சோதனை நடத்த, அவர் உத்தரவிட்டுள்ளார் என கூறினார். மேலும் டில்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழலில் ஈடுபட்ட அருண் ஜெட்லி மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என ஆம் ஆத்மி கூறியது. ஆனால் இதனை மத்திய அரசு, அருண் ஜெட்லி மற்றும் பா.ஜ., மேலிடம் மறுத்தது.
ஜெட்லிக்கு ஆதரவு: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளித்துள்ள பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான, ரவிசங்கர் பிரசாத், அருண் ஜெட்லி மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரிக்கிறோம். அவரின் நேர்மை மீது நம்பிக்கை உள்ளது. டில்லி அரசில் உள்ள ஊழல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை காப்பாற்றவே ஆம் ஆத்மி முயற்சி செய்கிறது என கூறியுள்ளது.
கெஜ்ரிவால் மீது வழக்கு: இந்நிலையில் கெஜ்ரிவால் மீது அருண் ஜெட்லி கோர்ட்டில், சிவில் மற்றும் கிரிமினல்அவதூறு வழக்கு தொடர உள்ளார்.
இது தொடர்பாக அருண் ஜெட்லி கூறுகையில், கெஜ்ரிவால் தவிர, குமார்விஸ்வாஸ், அசுதோஷ், சங்சய் சிங், ராகவ் சத்தா, தீபக் பாஜ்பாய் ஆகியோர் மீதும் வழக்கு தொடர உள்ளேன். தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் தவறான மற்றும் அவதூறு கருத்துக்களை கூறியதற்காக, தானாக அவதூறு வழக்கு தொடர உள்ளேன். எனது குடும்பத்தினர் எந்தவித தொழிலிலும் ஈடுபடவில்லை. ஆர்வம் காட்டவில்லை. அவ்வாறு இருக்கையில், விளையாட்டு அமைப்பில் அவர்கள் ஏன் ஈடுபட வேண்டும். மன்னிப்பு கோருங்கள் அல்லது அவதூறு வழக்கு தொடருவேன் என அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப விரும்பவில்லை என கூறினார்.
இது தொடர்பாக ஆம் ஆத்மியின் தீபக் பாஜ்பாய் கூறுகையில், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு பிறகு மக்கள் அனைவரும் ஆதாரங்களை தெரிந்து கொண்டுள்ளனர். ஊழல் எங்கு நடந்தாலும் அதற்கு எதிராக போராடுவோம் என உறுதிபூண்டுள்ளோம் என கூறினார்.
மற்றொரு தலைவர் அசுதோஷ் கூறுகையில், அவதூறு வழக்கு என அறிவித்து ஜெட்லி எங்களை மிரட்ட வேண்டாம். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தாருங்கள். நீங்கள் எங்களை நீதிமன்றத்திற்கு அழைத்துள்ளீர்கள். நாங்கள் மக்கள் நீதிமன்றத்திற்கு உங்களை அழைத்து செல்வோம் என கூறியுள்ளனர்.

No comments